ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்குபூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் தொடர்கின்றன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான் என்றும் முழுமையான அளவு கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதற்கிடையே, தங்கம் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் எடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இறக்குமதியும் ஓரளவு குறையும்.
வெளிநாட்டு இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் தங்கம் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கிடையே, முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடும் பணிகளை ஒடிசா அரசு துரிதப்படுத்தியுள்ளது.