இந்தியாவின் பல கோடீஸ்வரர்கள் மற்றும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதை சட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பு டெபாசிட் செய்யப்பட்டிருந்த இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களை தற்போது சுவிஸ் தேசிய வங்கி வழங்கி இருக்கிறது. அதன்படி 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.37,600 கோடி) அளவுக்கு இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் (1.04 பில்லியன் சுவிஸ் பிராங்க்) 3 மடங்கு அதிகம் ஆகும். இந்த பணம் பெரும்பாலும் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பணமாகும். தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது.