இஸ்ரேல்-ஈரான் போர்…எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு தீப்பிழம்பு… நாளுக்கு நாள் தீவிரமாகும் இந்த சண்டை, இப்போது இஸ்ரேலுக்கு ஒரு ஆழமான சவாலாக மாறியிருக்கிறது. புகழ்பெற்ற இரும்பு டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ-3 போன்ற பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்கும் திறனைக் காட்டினாலும்… கடந்த ஆறு நாட்களாக ஈரானிய தாக்குதல்களின் கடும் அழுத்தத்தால், இஸ்ரேலுக்கு இடைமறிப்பு ஏவுகணைகள் தீர்ந்துவரும் நிலையைக் காட்டுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் தங்களிடம் தற்போது குறுகிய தூர ஏவுகணைகளைத் தடுக்க இடைமறிப்பான்கள் இல்லை என்றும், தற்போது உள்ள நிலை மேலும் 10 முதல் 12 நாட்கள்தான் நீடிக்கக்கூடும் என்றும் கூறுகின்றன. தற்போது, ஈரான் தினசரி ஏவுகணைகளை ஏவி வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவல்படி, இஸ்ரேலுக்கு எந்த ஏவுகணையை இடைமறிக்க வேண்டும், எந்த ஏவுகணையை விட்டுவிட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜூன் 13 முதல், ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 400 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் III” எனும் ஈரானிய பதிலடியாகும். நிபுணர்கள் கூறுவதுபோல், ஈரானிடம் 2,000 ஏவுகணைகள் உள்ளன. அதில் பல நிலத்தடியில் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தினசரி சுமார் 285 மில்லியன் டாலர்கள் செலவாகின்றன. ஒரு ஆரோ 3 ஏவுகணை மட்டும் \$3 மில்லியன். இரண்டு வாரங்களுக்குள் இஸ்ரேலுக்கு இடைமறிப்பான்கள் தீர்ந்து விடும் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இஸ்ரேல் கூறுவதுபோல், 90% ஏவுகணைகளை இடைமறிக்க முடிந்துள்ளது. இருந்தாலும், டெல் அவிவ், ஹைஃபா, ராமத் கான், பேட் யாம், ரிஷோன் லெசியோன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பேட் யாம்(Bat Yam), ஹைஃபா(Haifa), ரிஷோன் லெசியோன்(rishon lezion) போன்ற நகரங்களில் வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன. இஸ்ரேல் வரி ஆணையத்துக்கு 18,766 சேத உரிமைகோரல்கள் கிடைத்துள்ளன. இதில் 15,861 கட்டிடங்கள் தொடர்பானவை.
இந்த போரை தூண்டிய முக்கியமானது என்னவென்றால் – இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற திட்டத்தின் கீழ், ஜூன் 13 அன்று, தெஹ்ரான் உட்பட ஈரானிய நகரங்களை வான்வழியில் தாக்கியது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், இராணுவத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலாக, ஈரான் பல்வேறு இஸ்ரேலிய நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கியது. இதுவரை ஈரானில் 230 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருநாடுகளும் பேரழிவை நோக்கி நகரும் இக்கணங்களில்… உலக நாடுகள் அமைதிக்காக அழைப்பு விடுக்கின்றன. ஆனால் கையில் ஏவுகணையுடன், உணர்ச்சிகளால் வழிகாட்டப்படும் நாடுகளுக்கு அமைதி எங்கே? என்ற கேள்வி எழுகிறது…..