இஸ்ரேல் தற்போது வரை நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அமெரிக்கா கண்ணசைத்தால் ஈரானின் மொத்த கதையும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படி என்ன ஆயுதங்கள் அமெரிக்காவின் கைவசம் உள்ளன… அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பவற்றை விளக்குகிறது இந்த பதிவு.
Bunker Busters… மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா தயாரித்து வைத்திருக்கும் அதிபயங்கர ஆயுதம் தான் இந்த Bunker Busters. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் GBU-57 Massive Ordnance Penetrator அதாவது MOP எனும் இந்த குண்டுதான் இத்தகைய வேலையை பிசிறு தட்டாமல் செய்யும். நிலத்திற்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகளை அழிப்பதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குண்டுகள் தான் இவை.
உதாரணமாக 20 மாடி கட்டடத்தின் மீது இந்த குண்டு வீசப்பட்டால் அது தரைத்தளம் வரை துளைத்து சென்று பின்னர் வெடிக்கும். எனவே இந்த கட்டடத்தில் எந்த இடத்தில் எதிரி பதுங்கி இருந்தாலும், உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. அதே போல மலைகளுக்கு உள்ளே இருக்கும் ஈரானின் அணுசக்தி மையங்களை இது ஊடுருவித் தாக்கி அழித்து தகர்த்துவிடும். இந்த குண்டு அணு சக்தி மையங்களை தரைமட்டமாக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் பலத்த சேதத்தை உண்டாக்கி அணு சக்தி மையத்தில் கதிர்வீச்சு கசிவை ஏற்படுத்துவதால் இவை எதிரியை திக்குமுக்காட வைத்துவிடும்.
அதே நேரத்தில் ஈரானிடம் இருக்கும் ஏவுகணைகள் குறித்தும் கவனிக்க வேண்டும். ஈரானிடம் அதிக அளவில் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகள் உள்ளன. இவை ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செலுத்தப்படும். அதன் பின் புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு இலக்கை நோக்கி விழும். இந்த ஏவுகணைகளை ஒரு முறை எய்துவிட்டால், பின்னர் எய்தவரே நினைத்தாலும் அதை கட்டுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.