Wednesday, June 18, 2025

திண்டுக்கல்லில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல், ஆத்தூர் தாலுக்கா, கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட புடரிமேடு பகுதியில் வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேரை சோதனை செய்த போது அவர்களிடம் வேட்டையாடப்பட்ட காட்டு முயல் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து மூன்று நபர்களையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை விசாரணை செய்தபோது, தர்மத்துப்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் செல்வகுமார், மைக்கேல்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் சூர்யா மற்றும் கூத்தம்பட்டியை சேர்ந்த ஆச்சிமுத்து ஆகிய மூவரும் கன்னி வைத்து முயலை பிடித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு எண் 11/2025 நாள் 16.06.2025ல் வழக்கு பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் மூன்று நபர்களுக்கும் தலா ரூ.25,000/- வீதம் 75,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news