சீனாவில் 2019ல் தொடங்கிய கொரோனா, உலகம் முழுவதும் பரவியது. தற்போது புதிய வகை கொரோனா மீண்டும் பரவி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.
நாடு முழுவதும் 7,264 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 220 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிறன்று முழு ஊரடங்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்ததாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
இந்த செய்தி 2022ம் ஆண்டு சத்தியம் டிவி வெளியிட்டுள்ள பழைய செய்தி என தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. பழைய செய்தியை தற்போது வெளியான செய்திபோல் தவறாகப் பரப்பி வருகின்றனர் எனவும் வதந்தியைப் பரப்பாதீர் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

