விழுப்புரம் புதுச்சேரி சாலையான ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இரவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பணம் எடுக்கும் எந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் உள்பக்கமாக அலுமினிய தகடு ஒன்றை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதன் பிறகு அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் பலர், தங்களுடைய ஏடிஎம் அட்டையை சொருகி பணம் எடுக்க முயன்றபோது பணம் ஏதும் வரவில்லை என்பதால் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அவர்களது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் இது போன்ற கோளாறுகள் அடிக்கடி வரும், பின்னர் தங்கள் வங்கி கணக்கிற்கு பணம் தானாகவே வரவு வைக்கப்பட்டு விடும் என்று கருதி அவர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அந்த ஏடிஎம் மையம் அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர்களில் 3 பேர் மட்டும் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அங்குள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு பெண் அங்கிருந்த நபர்களை பார்த்து திருடன் திருடன என கூச்சலிட்டார். உடனே அந்த நபர்கள் அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.