இன்று அமெரிக்கா ஒரு அதிநவீன போர் விமானத்தையும், அதன் பாதுகாப்பு உள்கட்டமைப்பையும் காத்துக்கொள்ள சீனாவிடம் கெஞ்ச வேண்டிய சூழ்நிலையை சந்தித்துள்ளது. காரணம் – ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த கனிமம் – சமாரியம்.
உலகில் சமாரியத்துக்கான முக்கியமான ஆதாரம் சீனாதான். இந்த உலோகமின்றி, அமெரிக்காவின் வலிமையான மிக முக்கிய – F-35 போர் விமானங்களை உருவாக்கவே முடியாது. ஒவ்வொரு F-35-இலும் 50 பவுண்டுகளுக்கு மேல் சமாரியம் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இல்லாமல், அந்த விமானம் மட்டும் இல்லாமல், ஏவுகணைகள், ஸ்மார்ட் குண்டுகள், ரோபாடிக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் சீனா, சமாரியம் உட்பட ஏழு அரிய பூமி தனிமங்களின் ஏற்றுமதியை தடை செய்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னேற்பாடு என்றால், சில மாதங்களுக்கு மட்டும் அமெரிக்காவின் கையில் சமாரியம் கையிலிருக்கிறது. ஆனால் அதன் பிறகு? கேள்வி குறியாகத்தான் இருக்கின்றது.
இது குறித்து நிபுணர்கள் தெரிவிப்பது என்னவென்றால் – சீனாவின் இந்த முடிவால், அமெரிக்காவின் பாதுகாப்பு திட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படலாம். ஜெட் விமானங்களைத் தயார் செய்ய இயலாமல் போவதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாட்டும் தடுமாறும்.
இன்று, வர்த்தகத்தில் கட்டணங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், சீனா தனது முக்கிய மூலதனமான சமாரியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஆற்றலையே கையிலெடுக்க முயல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் – சமாரியம் இல்லாமல், அமெரிக்கா முன்னோக்கி செல்வது கடினம். அதனால்தான், ஒரு சிறிய உலோகத்துக்காக ஒரு பெரிய நாடு… இன்று கூனிக் கிடக்கிறது.