ராமாபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராமாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ராமாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரைப் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
கைது செய்து விசாரணை செய்ததில் அவர் முகலிவாக்கத்தைச் சேர்ந்த சுதாகர் (29) என கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ராமாபுரத்தைச் சேர்ந்த ஆதி (என்ற) வினோத் (24), ஜானி (29), நவீன் குமார் (27), அருண்குமார் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 460 வலி நிவாரண மாத்திரைகள், ஒரு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிமாநிலங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆட்டோவில் சென்று விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.