மே 27ம் தேதி நடந்த கடைசி லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ ரிஷப்பின் அதிரடி சதத்தால் 227 ரன்களை குவித்தது. தொடர்ந்து Chasing செய்த பெங்களூரு 18.4 ஓவரில் இலக்கினை எட்டி, பாயிண்ட் டேபிளில் 2வது இடத்திற்கு முன்னேறியது.
இதனால் பஞ்சாப்புக்கு எதிராக தோற்றாலும், RCBக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். லக்னோ-பெங்களூரு இடையிலான போட்டி விக்கெட் கீப்பர்களின் போட்டியாகவே மாறிவிட்டது. ரிஷப் போல ஜிதேஷ் சர்மாவும் மிரட்டி விட்டுவிட்டார். இதில் திக்வேஷ் ரதி பவுலிங் செய்தபோது Non – Striker எண்டில் நின்றிருந்த ஜிதேஷ் சர்மாவை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார்.
ஆனால் மேல் முறையீட்டை லக்னோ கேப்டன் ரிஷப் திரும்பப் பெற்றதால், 3வது நடுவர் அது Not Out என தீர்ப்பளித்தார். தொடர்ந்து ஜிதேஷும், ரிஷப்பை கட்டியணைத்து நன்றி சொன்னார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின், ரிஷப்பின் இந்த செயலை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின், ” ஒரு கேப்டனின் செயல் பவுலருக்கு ஆதரவாக இருப்பதே. இது பந்துவீச்சாளருக்கு ஒரு அவமானம். கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் ரிஷப் தனது பவுலரை சிறுமைப்படுத்தி விட்டார். எனவே இதற்குப்பிறகு அவர் இதை செய்வாரா? என்பது தெரியவில்லை.
‘திக்வேஷ் அப்படி செய்திருக்கக் கூடாது’ என நிறைய பேர் கமெண்ட் செய்தனர். ஏன் அப்படி செய்யக்கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது? திக்வேஷ் எனது உறவினரோ, நண்பரோ அல்ல. அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.
ஆனால், நீங்கள் அந்த பவுலரை அச்சுறுத்துகிறீர்கள். ஏனெனில், பவுலர் குறித்து யாரும் அக்கறை கொள்வது இல்லை. அதனால் தான் கோடிக்கணக்கான பேர் பார்க்க அவர் அவமதிக்கப்பட்டாரா?,” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை, அஸ்வின் இதேபோல ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய, அது கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.