ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளில் ஆண்களை மட்டும் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாயிலாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் பிவானியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பாஜக ராஜ்யசபா எம்.பி., ராம் சந்தர் ஜங்ரா சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார். பஹல்காமில் பயங்கரவாதிகளால் கணவர்களை இழந்த பெண்களிடம், வீரம் மிகுந்த குணங்கள், வைராக்கியம் இல்லை என்று கூறினார்.
பெண்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் பறித்தபோது, வீரம் இல்லாமல் கைகளை கட்டிக் கொண்டு இருந்து விட்டனர் என்று ராம் சந்தர் ஜங்ரா தெரிவித்தார். அக்னி வீர் திட்டத்தை போல, சுற்றுலா பயணிகளும் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் நான்கு பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது என்று கூறிய அவர், நம் பெண்கள் சண்டையிட்டிருக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்திருந்தால், உயிரிழப்புகள் குறைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
பாஜக எம்.பி.,யின் கருத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.