மதுரையில் தடை செய்யப்பட்ட மையோனஸ் சவர்மா மற்றும் சிக்கன் சாப்பிட்ட 4 இளைஞர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு ஏப் 8 ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ( GRILL NIGHTS) என்ற உணவகத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெபராஜ்,(23),சுரேந்தர்(23),கணேஷ்ராஜா(23) மற்றும் பனங்காடியை சேர்ந்த ஜான் (23) ஆகிய நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், மயோனஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ஷவர்மா போன்றவற்றை சாப்பிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இரவு தொடங்கி காலை வரை தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு இருவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து மீண்டும் மயக்கம் ,வாந்தி ,பேதி என உடல் நலக்குறைவு ஏற்பட மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நரிமேடு பகுதியில் உள்ள இரவு உணவு சாப்பிட்ட பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உணவகத்தில் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.