கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 9 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனை விவரம்: திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனை, சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசருக்கு 5 ஆயுள் தண்டனை, சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, ஹெரன்பால் 3 ஆயுள் தண்டனை, அருளானந்தம், அருண்குமார், பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.