கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி, பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இது, அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் மற்றும் லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மார்க் கார்னி மார்ச் 14ஆம் தேதி பிரதமர் பதவியை பொறுப்பேற்றார்.
பதவியேற்ற சில நாட்களிலேயே, மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்மை சிதைக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அவரது அழுத்தங்களை எதிர்கொள்ள வல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.