லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்த ஆண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. கேப்டன் கே.எல்.ராகுலுடன் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அணியில் பெரிய மாற்றங்களை எல்எஸ்ஜி மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டைய மெகா ஏலத்தில் சில முக்கியமான மற்றும் நன்றாக விளையாடக்கூடிய வீரர்களை எடுத்திருந்தாலும், இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது.
14 போட்டிகளில் வெறும் 6 வெற்றிகள் மட்டுமே பெற்றதால், ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த லக்க்னோ, சீசன் முடிவில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அணியின் ஆலோசகராக இருந்த முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான், ஒரு வருட ஒப்பந்தத்துடன் இருந்ததால், மீண்டும் அவரை நீடிக்க வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அதேபோல், 2024ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக இணைந்த ஜஸ்டின் லாங்கரும், தொடர்ச்சியாக இரு முறை தோல்வியை சந்தித்ததால், அவரின் ஒப்பந்தமும் நீடிக்க வாய்ப்பு குறைவே என கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல, அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறார் கேப்டன் ரிஷப் பந்த். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையில் ரூ.27 கோடிக்கு எல்எஸ்ஜி அணியால் எடுத்தபோதும், இந்த சீசனில் அவர் சரியாக விளையாட முடியவில்லை. சில போட்டிகளில் பந்த் களமிறங்கும் முன்னர் பவுலர்களே பேட்டிங் செய்தனர். 13 இன்னிங்ஸ்களில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் மட்டுமே அடித்துள்ளார். இதனால், அடுத்த சீசனில் அவரை ஏலத்தில் விடலாமா? குறைந்த தொகைக்கு மீண்டும் எடுக்கலாமா? என ஆலோசிக்கப்படுகிறதாம்.
2022ல் ஐபிஎல்க்கு புதியதாக வந்த லக்னோ, மூன்று சீசன்களாக கோப்பையை வெல்ல போராடியே வருகிறது. ஆனால் இந்த முறை, மிக முக்கியமான மாற்றங்கள் அணியின் அடையாளமாக அமைவதற்கான வாய்ப்பு பெரிதாகவே இருக்கிறது.