Friday, June 13, 2025

அனுமதியின்றி மண் எடுத்த 10 லாரிகள் : மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

அம்பத்தூர் குளத்தில் இருந்து மண் எடுக்க வந்த லாரிகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை, அம்பத்தூர், மங்களபுரம் பகுதியில் உள்ள கருமங்குளத்தை அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி ஆழப்படுத்தி கரை அமைத்து வருகிறது. இந்நிலையில் சிலர் அனுமதி இல்லாமல் லாரிகள் மூலம் குளத்தில் மண் எடுப்பதாக அப்பகுதிமக்களுக்கு தெரியவந்தது.

உடனே இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய 10 டாரஸ் லாரிகளை மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் 10 டாரஸ் லாரிகள் மற்றும் மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news