இறந்த மனைவி உடலுடன் 21 ஆண்டுகளாக வாழ்ந்த இராணுவ அதிகாரி…

290
Advertisement

இறந்துபோன தன் மனைவியின் உடலுடன் 21 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார் ஒரு இராணுவ அதிகாரி. அவரின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் சான் வாட்ச ராகர்ன். பல பட்டங்களைப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழும் அவர் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய இவர் ஓய்வுபெற்ற பின் அங்குள்ள பாங்காங் நகரில் வசித்துவருகிறார். பாங்காங் நகரில் உள்ள சுகாதார அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய இவரது மனைவி உயர் ரத்த அழுத்தம், மூளையின் தமனியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக 2001 ஆம் ஆண்டில் காலமானார்.


அவரது உடல் புத்தமதச் சடங்குகளை நிகழ்த்துவதற்காக வழிபாட்டுத் தலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், உடலைத் தகனம் செய்யாமல் வீட்டுக்குக்கொண்டு வந்த சான், சவப்பெட்டியிலேயே தன் மனைவியின் உடலை வைத்திருந்தார். உடலை பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகளால் மூடிவைத்து மறைத்திருக்கிறார். அவருடன் 2 மகன்களும் வசித்துவந்தனர்.

தந்தையின் இந்த முடிவு பிடிக்காத மகன்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். மின்சார வசதியில்லாத வீட்டிலேயே மனைவி உடலுடன் தொடர்ந்து வசித்துவந்தார் சான்.


இந்த விவரம் அரசுக்குத் தெரியவந்தது- உடனே அங்குவந்த அரசு அதிகாரிகள் அவரிடம் இதுபற்றிக் கேட்டுள்ளனர். அதற்கு சான் தனது மனைவியுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும், தனது பிரச்சினைகளை அவளிடம் கூறியதாகவும், முதல் பார்வையிலேயே காதல்கொண்டு திருமணம் புரிந்ததாகவும், தங்கள் வாழ்க்கையில் ஒருமுறைகூட சண்டையிட்டதில்லை என்றும், தனக்கு வயதாகிவிட்டதால் மனைவிக்கு அன்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சியதால் மனைவியின் உடலைத் தன்னுடனேயே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அவருக்கு ஆறதல் கூறிய அதிகாரிகள் சான் மனைவியின் அழுகிய உடலைக் கைப்பற்றித் தன்னார்வலர்கள் உதவியுடன் எரியூட்டினர். தற்போது மனையின் அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துத் தன் வீட்டில் வைத்துள்ளார் இந்தப் பாசக்காரக் கணவர்.


சான் தனது மனைவியின் இறப்பை அரசு அலுவலகத்தில் பதிவுசெய்திருந்ததால், அதிகாரிகள் அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் முடிவற்ற அன்பு முடிவுக்கு வந்துள்ளது.