மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள மான்கூர்டு பகுதியைச் சேர்ந்த சானியா (19) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அந்த இளம்பெண் சிறுவனை தனது வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீட்டில் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என அந்த இளம்பெண் சிறுவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுவன் மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், இளம்பெண் சிறுவனை திருமணம் செய்ய அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுவனை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் திகைத்த சிறுவன், நடந்தவற்றை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மீண்டும் மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மீண்டும் போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
