திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (42). இவரது மனைவி முத்துலட்சுமி (35). இந்தத் தம்பதிக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் தகராறு முற்றியதால் முத்துலட்சுமி பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், தம்பதி இருவரையும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் நேரில் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணவன் – மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி படுத்திருந்த தனது கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
பாலசுப்பிரமணியனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இடுப்புப் பகுதிக்குக் கீழே, கால் வரை 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.