குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் நேற்று விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அகமதாபாத்தில் நடந்திருப்பது ஒரு விபத்து; யாராலும் விபத்துகளை தடுக்க முடியாது என அமித்ஷா தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறியதாவது : “விபத்துகள் கடவுளின் செயல் அல்ல; விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவை. அமித்ஷா கூறுவதை பார்த்தால் பாதுகாப்பு கட்டமைப்பு, விதிமுறைகளை நிறுத்திவிடலாம் என்பதுபோல் உள்ளது. விபத்து நடப்பதை விதி என்று விட்டுவிட வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறாரா? எதையும் தடுக்க முடியாவிட்டால், நமக்கு ஏன் அமைச்சகங்கள் உள்ளன?” என்று பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.