இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மோதல், உலக கவனத்தை ஈர்த்தது. “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் இந்திய ராணுவ நடவடிக்கையால் பெரும் பாதிப்பை சந்தித்த பாகிஸ்தான், அதனை சகிக்க முடியாமல், பதிலடி கொடுக்க முயன்றது. அதனடிப்படையில், இருநாடுகளும் சுமார் நான்கு நாட்கள் தீவிரமாக மோதிக்கொண்டன.
இந்தச் சூழலில், பாகிஸ்தானே முதலில் போர்நிறுத்தத்துக்கு தூதுவிட்டது என இந்தியா கூறுகிறது. மே 10ம் தேதியன்று மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான்” எனத் தொடர்ந்து கூறி வருகிறார்.
அவரது கூற்றுப்படி, அமெரிக்கா தலையிடவில்லை என்றால், இது ஒரு அணு ஆயுத பேரழிவாக மாறியிருக்கும் என்று அவர் எச்சரிக்கிறார். ஓவல் அலுவலகத்தில் எலான் மஸ்க் உடன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் சண்டையிட்டதை நாங்கள் தடுக்கவில்லை என்றால், இது அணுகுண்டு தாக்குதலாகி இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், இருநாடுகளும் பதற்றத்தை குறைக்க ஒத்துழைத்ததற்காக நன்றி தெரிவித்தும் இருக்கிறார்.
ஆனால், இந்திய அரசு இது குறித்து நேர்த்தியாக மறுப்பு தெரிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு யாரும் தலையிடவில்லை என்றும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரடியாகவே பேசி, போர்நிறுத்தம் நடந்ததாகவும் கூறி வருகிறது. இந்தியா தொடர்ந்து, “எங்களுக்குள் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது மட்டுமே” என வலியுறுத்துகிறது.
இதற்கிடையில் டிரம்ப், உலக நாடுகள் எங்களது ராணுவ வலிமையை உணர்கின்றன, நாம் தலையிடாமல் இருந்தால் பல பேரழிவுகள் ஏற்படும் எனக் கூறி, தனது செயலை பெரிதுபடுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மத்திய கிழக்கு பயணத்திலும் இதே கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.
அதாவது, இந்தியா திட்டவட்டமாக வெளிநாட்டு தலையீட்டை மறுத்தாலும், டிரம்ப் தொடர்ந்து “நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன்” என பீதி, பெருமை கலந்து பேசிக்கொண்டு வருகிறார்.