மகளிருக்கு ₹2500 எப்போ வரும் ? முதல்வர் ‘விஜய்’ போடப்போகும் கையெழுத்து!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தின் மீது திரும்பியுள்ளது. அதுதான் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, பொருளாதார ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்படும். இன்று மே 15, என்பதால் இல்லத்தரசிகள் அனைவரும் தங்கள் மொபைல் போன்களில் மெசேஜ் வருகிறதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

புதிய அரசு பதவிக்கு வரும்போது பழைய திட்டங்களை நிறுத்துவது அல்லது பெயர் மாற்றுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அப்படியே தொடரும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, நேற்றுதான் பள்ளி மாணவ, மாணவியருக்கான ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டங்களுக்கான நிதியை அரசு விடுவித்திருந்தது. இதனால் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, பழைய திட்டங்கள் நிறுத்தப்படாது என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ள ஒரு கேள்வி இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது, ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இந்த மாதம் 1000 ரூபாய் வருமா அல்லது விஜய் சொன்னது போல 2500 ரூபாய் வருமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அரசுத் தரப்பு, இந்தத் திட்டத்தை முழுமையாகச் சீரமைக்க தங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, பயனாளிகளின் பட்டியலைச் சரிபார்த்து, தகுதியான அனைவருக்கும் இந்த 2500 ரூபாய் சென்றடைவதை உறுதி செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால், இந்த மாதம் பழைய தொகையான 1000 ரூபாய் வரவு வைக்கப்படுமா அல்லது புதிய தொகையோடு சேர்த்து வழங்குவதற்காகச் சிறிய தாமதம் ஏற்படுமா என்ற கேள்வி எழுகிறது.

எது எப்படியோ, மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பது சாமானிய மக்களுக்குப் பெரிய ஆறுதலைத் தந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News