மீண்டும் ஒருமுறை சொந்த அணி குறித்து பேசி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். நடந்து முடிந்த 18வது IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது இடத்திலேயே கடைசிவரை இருந்து தொடரில் இருந்து வெளியேறியது.
முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பியதால் தொடருக்கு நடுவே மாற்று வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வந்ததற்கு பின்னர் CSKவின் பேட்டிங் ஆர்டரும் வலுவடைந்தது. இதனால் அடுத்த சீசனிலும் இவர்களை தக்க வைத்திட சென்னை அணி திட்டம் தீட்டி வருகிறது. இந்தநிலையில் CSK வீரர் அஸ்வின் சமீபத்திய Youtube உரையாடலில், பிரேவிஸ் குறித்த தெரிவித்த கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரேவிஸ் குறித்து அஸ்வின், ” பிரேவிஸ் ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே நன்றாக ஆடுகிறார். மத்தபடி ஒரு மேட்சை முடித்து வைக்கும் அளவுக்கு அவரிடம் திறமை இல்லை,” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள்,” சொந்த டீம் பேட்ஸ்மேன் மேல இவ்வளவு வன்மமா?
இந்த IPL சீசன்ல நீங்க எப்படி பந்து வீசுனீங்கன்னு நெனைச்சு பாருங்க. வேகப்பந்து வீச்சுக்கு எதிரா ஒரே ஓவர்ல 30 ரன்கள் அடிச்சு இருக்காரு. தயவுசெஞ்சு வேற டீம்க்கு போயிருங்க,” என்று விதவிதமாக விளாசி வருகின்றனர். முன்னதாக சென்னைக்கு சிறப்பாக ஆடிய பவுலர் நூர் அஹமதை, CSK ஏலத்தில் எடுத்ததை விமர்சனம் செய்திருந்தார்.
இதேபோல சென்னை அணிக்கு எதிராகவும் ஒருமுறை விமர்சனம் செய்து, ரசிகர்களிடம் சிக்கினார். பின்னர் CSK குறித்து இனி தன்னுடைய Youtube சேனலில் வீடியோக்கள் வராது, என்று தெரிவித்து அந்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது மீண்டும் ஒருமுறை 22 வயது டெவால்ட் பிரேவிஸ் குறித்து கருத்து தெரிவித்து, ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.