Wednesday, September 10, 2025

இன்னும் 2 வாரங்களில் தெரிந்துவிடும்..ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் டிரம்ப் முடிவு

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு உலக நாடுகளாலும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் களமிறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் கடந்த வாரம் புதின் மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். பின்னர், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.
அதற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது டிரம்ப், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க – ரஷ்யா – உக்ரைன் அதிபர்கள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் இதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியுடன் அமெரிக்காவிடம் இருந்து 7 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்தும் டிரம்புடன் ஆலோசனை நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ரஷ்ய அதிபர் புதின் பேசியிருக்கிறார். உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். இந்நிலையில், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் புதின் பேசியிருப்பது உலக அளவில் தனி கவனம் பெறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News