கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானின் அணு உலைகள் அமெரிக்க தாக்குதலுக்குள்ளானது. இதில் அணு உலைகள் அழிக்கப்பட்டதாகவே டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அணு உலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கமேனியின் உதவியாளர் கருத்துகளைக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் மோதலில் களத்தில் குதித்த அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்கியது. குறிப்பாக ஈரான் நாட்டில் உள்ள மூன்று முக்கியமான அணு உலைகளைக் குறிவைத்து அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்றன. இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் ஏறக்குறைய 12 நாட்கள் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவின் இந்த தாக்குதலே Game Changer ஆக இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலால் தங்கள் கையிருப்பில் உள்ள யுரேனியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி கூறியிருக்கிறார். இதை பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஆலைகளை மீண்டும் இயக்குவதற்கான திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். உற்பத்தி மற்றும் சேவையில் எந்தவொரு பின்னடைவும் இருக்காது. எங்களிடம் இன்னும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பில் உள்ளது. கேம் ஓவர் என நீங்கள் நினைத்தால்.. அது தவறு’ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.