Monday, June 30, 2025

‘தங்கத்தால்’ அலங்கரிக்கப்பட்ட வீடு இணையத்தில் ‘தீயாய்’ பரவும் வீடியோ

தினசரி தலைப்பு செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் 1 கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்து 726 ரூபாய். இன்னும் ஓரிரு தினங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்படலாம். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தன்னுடைய வீட்டு பொருட்களை தங்கத்தால் உருவாக்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். சமூக வலைதள பிரபலமான பிரியம் சரஸ்வத் என்பவர் அந்த வீட்டை சுற்றிக்காட்டி, ‘இந்தியாவின் இந்தூரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு’  என்னும் தலைப்பில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

வீடியோ வெளியிட்ட ஒரே நாளிலேயே 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதில் வீட்டுக்கு வெளியே பசு மாடுகளுக்காக மின்விசிறி வசதியுடன் தொழுவம் ஒன்றை அமைத்துள்ளனர். 1936ஐ சேர்ந்த அரிதான மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று வாசலில் நிற்கிறது. வீட்டுக்குள் ஸ்விட்ச் தொடங்கி வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும், 24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது அந்த வீட்டுக்குள் எங்கு பார்த்தாலும் தங்கம் தான் காணப்படுகிறது.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர், ” எங்கள் வீட்டில் மொத்தம் 25 பேர். சொத்தாக ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே இருந்தது. இதனால் நான் சாலை போடுவது, பாலம் கட்டுவது போன்ற அரசாங்க வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்தேன். தற்போது 300 அறைகளுடன் சொந்தமாக ஹோட்டல் கட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

இந்த வீடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ” அரசாங்க வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்தால் இவ்வளவு பணம் கிடைக்குமா?, இந்தியா ஏழைநாடு என்று யார் சொன்னது?, Switchகளை தங்கத்தால் வடிவமைப்பது உண்மையில் பாதுகாப்பானது தானா?,” இவ்வாறு விதவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news