இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் என்றால் அது ஆதார் அட்டை. அந்த ஆதார் தகவல்கள் தவறாக இருந்தாலோ அல்லது தவறாக பயன்படுத்தினாலோ அது சட்டப்பூர்வக் குற்றம். மட்டுமல்லாமல் அதற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆதார் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கியமான அடையாள சான்று. இது வங்கி, சிம் கார்டுகள், ரேஷன், அரசு மானியம், வரி தாக்கல் மற்றும் அரசு சேவைகளை பெற முக்கியமாக இருக்கிறது. ஆனால் ஆதாரில் தவறான விவரங்கள் இருந்தால் ஆதார் சட்டம், 2016 மற்றும் IT சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கப்பட ஒரு விதி உள்ளது.
அதன்படி பிரிவு 38ன் கீழ் ஒருவர் தெரிந்தே வேறொருவரின் ஆதாரைப் பயன்படுத்தினால், ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பிரிவு 39ன் கீழ் குறிப்பிட்ட நபரின் அனுமதியின்றி அவரின் ஆதார் தகவல்கள் சேகரிக்கப்பட்டாலோ அல்லது பகிரப்பட்டாலோ அந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் ஒருவர் தனது ஆதார் அட்டையில் வேண்டுமென்றே தவறான பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் ஃபோன் எண் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்தால், அது கடுமையான குற்றமாக கருதப்படும். இது தவிர, யாராவது வேறொருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தினாலோ போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஆதாரைப் பெற முயற்சித்தாலோ அவர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும். வேறொருவரின் ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் தரவை மற்றொருவர் பயன்படுத்தும்போது இந்தக் குற்றம் இன்னும் தீவிரமடைகிறது.
எனவே உங்கள் ஆதார் தகவல்கள் துல்லியமாக இல்லாத பட்சத்தில் அவற்றை திருத்தம் செய்துகொள்வது சட்ட நடவடிக்கைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.