நமது நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் பற்றிய தகவல்களை, பாகிஸ்தான் நாட்டுக்கு ஒரு நபர் வழங்கி வருவதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எல். நிறுவனத்தில் இருந்து சில தகவல்கள் சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அந்த ஆதாரத்தின் பேரில் பெங்களூரு பி.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்த தீப்ராஜ் சந்திரா என்ற ஊழியரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது.
இவர் பி.இ.எல். நிறுவனத்தில் திட்ட மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான தீப்ராஜ் சந்திராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.