மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 375 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,100 கோடி) அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த 6 வாரங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, மெட்டா தனது செயலிகளை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற வகையில் வடிவமைத்ததுடன், பாலியல் சுரண்டல்களில் இருந்து சிறுவர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது என அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. லாப நோக்கத்திற்காக குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்ட 40 பேரிடம் சாட்சி பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.
அரசுத் தரப்பு 2.2 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, Meta நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தங்களது தளங்களில் தவறான மற்றும் பாதகமான உள்ளடக்கங்களை கண்டறிந்து நீக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளது.
