எதிர்பாராத விதமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ரஷ்யாவுக்கு மிகப் பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. இது சாதாரண தாக்குதல் அல்ல – இப்போதுவரை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் மிகப்பெரியதொரு ஆபரேஷனாக இது கருதப்படுகிறது.
ரஷ்யாவின் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான், மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து முக்கிய ராணுவ விமான தளங்கள் இலக்காகக் குறிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” என்ற குறியீட்டு பெயர் வைத்துள்ளனர் – அதாவது “சிலந்தி வலை” என்ற பொருள். உக்ரைன் துல்லியமான திட்டமிடலுடன், ரஷ்யாவின் இராணுவம் நிமிடமே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, மின்னல் வேகத்தில் தாக்குதலை முடித்துவிட்டது.
இந்த ஆபரேஷனில் ரஷ்யாவின் முக்கிய போர் விமானமான Tu-95 மற்றும் Tu-22 உள்ளிட்ட 41 விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பெலாயா விமான தளம் மட்டும் உக்ரைன் எல்லையிலிருந்து 4,300 கிமீ தொலைவில் உள்ளது. அந்தளவுக்கு உள்ளே சென்ற இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.
இது சாதாரணமாக டிரோன்களை ஏவுவது போல இல்லை. உக்ரைன் முன்கூட்டியே திட்டமிட்டு, லாரிகளில் மரக்கூரைகளுடன் மறைத்து, டிரோன்களை ரஷ்யா உள்ளே கடத்தியுள்ளது. இந்த லாரிகள் விமான தளங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டபோது, மேலிருந்த போலி கூரை ரிமோட் கண்ட்ரோலால் திறக்கப்பட்டு, டிரோன்கள் பறந்து சென்று நேர்த்தியாக இலக்குகளை தாக்கின. ரஷ்யா கூட இவை உக்ரைனில் இருந்து பறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதல், உக்ரைனின் திட்டமிடும் திறனை மட்டும் காட்டவில்லை – ரஷ்யாவுக்கு தன்னிடம் உள்ள பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்வி எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது. கடந்த 2022லிருந்து பல டிரோன் தாக்குதல்களை நடத்திய உக்ரைன், இந்த முறையை ஒரு ஆண்டுக்கு மேலாக திட்டமிட்டதாக கூறுகிறது.
இது ஒரு போர் பரிணாமத்தில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த “சிலந்தி வலை” தாக்குதல், எதிர்காலத்தில் டிரோன் போரின் வகையை மாற்றக்கூடிய மிக முக்கிய நிகழ்வாகும்.