காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி நடவடிக்கையாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழித்தது.
இந்த சூழலில், பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்திய ராணுவ வீரர் குர்பிரீத் கோபி மற்றும் அவரது நண்பர் சாஹில் மசீ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோபி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்து, பென் டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் இருந்து பல ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.