சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (50). இவரது மனைவி கவிதா(45). தையல் தொழிலாளியான ஆண்டி கடந்தாண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.