Saturday, June 21, 2025

இஸ்ரேல்–ஈரானால் துருக்கிக்கு விழப் போகும் மூன்று முக்கிய ‘அடி’! கதறும் எர்டோகன்!

“ஈரான் – இஸ்ரேல் இடையே தீவிரமடைந்திருக்கும் போர், தற்போது உலகத்தையே பதற்றப்படுத்தி வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் இந்த பதட்டங்கள் பரவியிருப்பதோடு, அண்டை நாடுகளையும் இந்த மோதலில் ஈர்த்துவிட்டன.

இந்நிலையில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், ஜெர்மனியின் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் உடன் தொலைபேசியில் பேசினார். அந்த உரையாடலின் போது, அவர் தனது கவலைகளை வெளிப்படையாகக் கூறினார்.

முதலாவது, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், எதிர்காலத்தில் துருக்கியையும் தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார். ஏனெனில், ஈரானும் துருக்கியும் ஒரு எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் துருக்கியின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது.

இரண்டாவது, போரால் ஈரானில் இருந்து அகதிகள் துருக்கியை நோக்கி பெருமளவில் தப்பிச் செல்லக்கூடும். துருக்கி ஏற்கனவே பொருளாதார சவால்களை சந்தித்து வரும் நிலையில், இது அந்த நாட்டின் வளங்களையும், பொருளாதாரத்தையும் பெரிதும் அழுத்தும்.

மூன்றாவது – இது மிக முக்கியமானது – அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு. எந்த ஒரு பக்கமும் அணு ஆயுதங்களை கையாள்ந்தால், அதன் தாக்கம் மேற்கு ஆசியாவை மட்டும் அல்லாமல் ஐரோப்பாவையும் எட்டும். கசிவோ, வெடிப்போ ஏற்பட்டால், அது உலகம் முழுவதையும் பாதிக்கும் என்றார் எர்டோகன்.

இந்தப் போர், அணுசக்தி பிரச்சினையை மையமாகக் கொண்டு நடந்துவருகிறது என்பதால், நிலைமை மிக ஆபத்தானதாக மாறியுள்ளது. எனவே, உலக நாடுகள் — குறிப்பாக ஜெர்மனி — உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எர்டோகன் வலியுறுத்துகிறார்.

இஸ்ரேல் சமீபத்தில் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியது. அதற்குப் பதிலாக ஈரானும் இஸ்ரேலின் நகரங்கள் மீது ஏவுகணைகளை தாக்கியுள்ளது.

புவியியல் ரீதியாக ஈரானுக்கு மிக அருகில் உள்ள துருக்கி, இந்தப் போரால் நேரடியாக பாதிக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த மோதல் தொடர்ந்தால், அது பிராந்தியத்தை மிகத் தளர்வான மற்றும் பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு சென்று, எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தக பாதைகளையே சீர்குலைக்கும் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் தான் — இந்தப் பிரச்சனைகளை ராணுவ நடவடிக்கையால் அல்ல, பேச்சுவார்த்தையால் தான் தீர்க்க வேண்டும்” என்று எர்டோகன் சொல்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news