இந்தியாவில் தங்கத்தின் விலை சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் நகை வாங்கவே 1.4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிலரின் மாத சம்பளத்திற்கும் அதிகமாக தங்கம் விலை உயர்ந்திருப்பது கவலைக்குரியதாகும். ஜனவரி மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம், பிப்ரவரியில் ஏற்ற இறக்கத்துடன் நகர்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14,930 மற்றும் சவரனுக்கு ரூ.1,19,440 என விற்பனையாகிறது.
இந்த உயர்வு சூழலில், சந்தையில் போலி நகைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக “பங்களாதேஷ் ரெட் கோல்ட்” என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நகைகள் உண்மையான தங்கம் அல்ல என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பு, நிக்கல் போன்ற உலோக கலவைகளால் தயாரிக்கப்படும் இந்த நகைகள், வெளிப்படையாக தங்கத்தைப் போலவே தோற்றமளிக்கும். பொதுமக்கள் எளிதில் ஏமாறக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது என்ற விளம்பரங்களை நம்பி வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நகை வாங்கும் போது ஹால்மார்க் குறியீடு உள்ளதா என்பதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். Bureau (பீரோ) of Indian Standards வழங்கும் HUID ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.
மேலும், நம்பகமான கடைகளில் மட்டுமே நகை வாங்க வேண்டும். வாங்கியபோது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் எடை, விலை, செய்கூலி, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்தால் மட்டுமே ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.
