ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு இஸ்ரேல் செய்த ‘சம்பவம்’? மொசாட் பிடியில் சிக்கிய முன்னாள் அதிபர்!

சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் செய்திதான், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் இடையேயான ரகசியத் தொடர்பு. ஒரு காலத்தில் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும் என்று முழங்கிய அதே அஹ்மதிநிஜாத்தை, இன்று ஈரானின் புதிய தலைவராக அமர்த்த இஸ்ரேல் ரகசியமாக முயன்றது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் (New York Times) இதழ் வெளியிட்டுள்ள இந்த அதிரடித் தகவல், ஈரானின் அதிகார வர்க்கத்தை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ரகசிய முயற்சி, ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானில் ஒரு புதிய ஆட்சியை அமைக்க இஸ்ரேல் போட்ட மெகா பிளான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

மஹ்மூத் அஹ்மதிநிஜாத், தனது அதிபர் காலத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல ஈரானின் தற்போதைய அதிகார மையங்களிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். ஆங்கிலம் கற்கத் தொடங்கியது முதல், தனது தோற்றத்தை மாற்றியது வரை அவர் ஒரு புதிய பிம்பத்தை உருவாக்க முயன்றார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, அவரைத் தனது வலையில் வீழ்த்தியதாக நியூயார்க் டைம்ஸ் தனது புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக 2025-ஆம் ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது, அப்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, காசா போரின் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, அஹ்மதிநிஜாத்தை ரகசியமாகச் சந்தித்துப் பேசியது இப்போது உலகிற்குத் தெரியவந்துள்ளது.

‘ஆபரேஷன் புஸ் இன் பூட்ஸ்’ (Operation Puss in Boots) என்று பெயரிடப்பட்ட இந்த ரகசியத் திட்டத்தின் கீழ், அஹ்மதிநிஜாத்தின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தங்கும் வசதிகளுக்கு இஸ்ரேல் ரகசியமாக நிதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியபோது, அஹ்மதிநிஜாத்தை பாதுகாப்பாக ஒரு ரகசிய இடத்திற்கு நான்கு மொசாட் ஏஜெண்டுகள் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இருப்பினும், இந்த மீட்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் அஹ்மதிநிஜாத் அதிருப்தியடைந்து, இஸ்ரேலின் திட்டத்திலிருந்து விலக முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் அவரைத் தலைவராக்கும் முயற்சி ஒரு பெரிய இழுபறிக்கு உள்ளானது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அலி காமேனியின் இறுதிச் சடங்கில் அஹ்மதிநிஜாத் பொதுவெளியில் தோன்றியது பல கேள்விகளை எழுப்பியது. தற்போது அவர் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான ஐ.ஆர்.ஜி.சி (IRGC) வசம் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் அவரைப் பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேற விட்டதா அல்லது ஈரானிய உளவு அமைப்புகள் அவரைக் கண்டுபிடித்தனவா என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஈரானின் உள்நாட்டு அரசியலில் பிளவை ஏற்படுத்த இஸ்ரேல் கையாண்ட இந்தத் தந்திரம், மத்திய கிழக்குப் பகுதியில் ஒரு புதிய புவிசார் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News