ஈரானில் முன் எப்போதும் இல்லாத வகையில் இராணுவ சவால்கள் தொடரும் நிலையில், தற்போது ஒரு புதிய மர்மம் அந்நாட்டை உலுக்குகிறது.
டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டால் போர்நிறுத்தம் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் ஈரானிய உச்ச தலைவர் எங்கே என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய ஊடகங்கள் காமெனியின் படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடவில்லை. அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், உச்ச தலைவர் ஒரு ரகசிய சுரங்க பதுங்கு குழிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்திருந்தனர். மேலும் அவரை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதால் மின்னணு தகவல்தொடர்புகளிலிருந்து விலகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட நபர்கள் கூட அவருடன் நேரடி தொடர்பில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கமேனியின் அலுவலகத்தின் மூத்த அதிகாரி மெஹ்தி ஃபஸேலியிடம் “மக்கள் உச்ச தலைவரைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்கப்பட்டது. ஆனால், அந்தக் கேள்வியை மூத்த அதிகாரி நிராகரித்து, ‘நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். உச்ச தலைவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.
“அவர் பல நாட்கள் இல்லாதது அவரை நேசிக்கும் நம் அனைவரையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது,” என்று கமேனி என்ற தினசரி செய்தித்தாளின் ஆசிரியர் மொஹ்சென் கலீஃபே கூறியுள்ளார். மேலும் டெஹ்ரானில், சமீபத்தில் நடந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தின் போது பெண்கள் கமேனியின் உருவப்படங்களை ஏந்திச் சென்றதைக் காண முடிந்தது. கமேனியை பற்றி ஈரானின் உயர் அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும், செய்தியும் வெளியாகாததால் “கமேனி எங்கே” என்ற கேள்விக்கு விடை மர்மமாகவே இருக்கிறது.