Tuesday, December 30, 2025

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் அச்சம்

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று இரவு 7.05 மணிக்கு, பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டது. விமானத்தில் 160 பயணிகள்,5 விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர்.

இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.

இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

Related News

Latest News