திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்பட் டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). டிரைவர். இவரது மனைவி அஜிதா (30). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் குழந்தைகளுடன், அஜிதாவின் சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்தனர். அஜிதா அந்தப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களின் குடும்பத்தினர் 2 பேரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர். எனினும், அஜிதாவின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன், மனைவி அஜிதாவின் கழுத்தை பிடித்து நெரித்ததில் மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை அறிந்ததும் மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, உயிரிழந்து கிடந்த அஜிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
