Wednesday, September 3, 2025

ரூ.7 கோடி மோசடி வழக்கு! நடிகர் சௌபின் ஷாஹிருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம், “மஞ்சும்மல் பாய்ஸ்”. ஆனால், அந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னால், இப்போது ஒரு பெரிய நிதி மோசடிப் புகாரும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவருமான, நடிகர் சௌபின் ஷாஹிருக்கு, துபாய்க்குப் பயணம் செய்ய, எர்ணாகுளம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிராஜ் வலியதுரா என்பவர், “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தின் தயாரிப்பிற்காக, தான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்குப் பதிலாக, தனக்கு 40 சதவிகித லாபப் பங்கு தருவதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளித்ததாகவும் கூறி, நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

படம், உலக அளவில் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மாபெரும் வெற்றி பெற்ற பிறகும், தனக்கு உறுதியளித்தபடி லாபத்தில் பங்கு தரவில்லை என்பதுதான் சிராஜின் குற்றச்சாட்டு.

இந்த வழக்கில், சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர், மற்றும் இணைத் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை மாதம் சௌபின் ஷாஹிர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், “நான் கைது செய்யப்படவில்லை. கேரள உயர் நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதால், என் கைது பதிவு செய்யப்படவில்லை,” என்று சௌபின் தெளிவுபடுத்தியுள்ளார்.

துபாய் பயணத்திற்குத் தடை ஏன்?

செப்டம்பர் 5-ஆம் தேதி, துபாயில் நடைபெற உள்ள ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக, வெளிநாடு செல்ல அனுமதி கோரி, சௌபின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவரது மனுவை நிராகரித்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “புகார்தாரரை ஏமாற்ற, குற்றம் சாட்டப்பட்டவர் சதி செய்துள்ளார்,” என்று கூறியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் தரப்பு என்ன சொல்கிறது?

“மஞ்சும்மல் பாய்ஸ்” தயாரிப்பாளர்கள், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். “சிராஜ், முதலீட்டுத் தொகையை சரியான நேரத்தில் கொடுக்கத் தவறிவிட்டார். இதனால், படத்தின் படப்பிடிப்பு தாமதமானது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஒருபுறம், ஒரு பிரம்மாண்டமான வெற்றிப் படம்… மறுபுறம், கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடிப் புகார். இந்த வழக்கில் உண்மை என்ன என்பது, இனிவரும் நீதிமன்ற விசாரணைகளில்தான் தெரியவரும்.

சௌபின் ஷாஹிர், கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், லோகேஷ் கனகராஜின் “கூலி”திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News