ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் அண்மையில் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச டி20 போட்டிகளுக்கு விடைகொடுத்த அவர், ஆஷஸ் தொடர், ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: சரியாக கூறவேண்டுமென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதனைகள் படைப்பதற்காக என்னுடைய உடலை எந்த அளவுக்கு வருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைக்கிறேன். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்து அதற்கு தயாராகி வருகிறேன் என கூறியுள்ளார்.