கடந்த 5-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் வரிசையில் நிற்காமல் அனைவரையும் முந்திக்கொண்டு ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்க வந்தார். இதனைக் கண்ட ராஜேந்திர பாலாஜி அவரை தாக்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், “மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்தவருக்கு (மாஃபா பாண்டியராஜன்) பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன். கட்சியைக் காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒண்ணும் பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு அரிவாள், துப்பாக்கி வந்தாலும் எதிர்த்து நின்று தாங்கி நிற்பேன். உன்னால் முடியுமா? என்னைப் பற்றிப் பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்துப் பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறீர்கள். விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது.” என முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார்.