கேரளாவில் 7 மாதங்களாக பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய கொடூர காவலர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் அருகில் உள்ள காவலர் குடியிருப்பை பயன்படுத்தி வந்தனர்.
இங்கு ரகசிய கேமராக்களை பொருத்தி, பெண் போலீசார் உடை மாற்றும் காட்சிகளை மர்மநபர் ஒருவர் ரகசியமாக பதிவு செய்து, ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறார் என பெண் காவலர் ஒருவர், மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய வைசாக் என்பவரை கைது செய்தனர். அவர் கடந்த 7 மாதங்களாக பெண் போலீசார் உடைமாற்றுவதை தனது செல்போனில் பதிவு செய்து மிரட்டியது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.