சமீப நாட்களாக இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் நிதி நெருக்கடி அந்நாட்டை திக்குமுக்காட வைத்துள்ளது. இதைச் சமாளிக்க முடியாமல் திணறும் பாகிஸ்தான் உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது நாம் அறிந்ததே. இந்த இக்கட்டான சூழலில் பாக்கித்தான் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளது.
அதாவது நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க கடந்த ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை அதாவது PIA-வை விற்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதநிலையில், இச்சம்பவம் உலகறிந்த பேசுபொருளானது. அந்த சிக்கலுக்கு பின்னர் தான் பாகிஸ்தான் ஏர்லைன்சை கடந்த ஆண்டு விற்பனை செய்ய முயற்சித்தது பாகிஸ்தான். ஆனால் அது வெற்றிபெறவில்லை. இதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின் கீழ் ஒரு திட்டம் போடப்பட்டது. அதன்படி நிதி திரட்டவும் பணத்தை வீணடிக்கும் அரசு நிறுவனங்களை சீரமைக்கவும் தேசிய விமான நிறுவனத்தின் 51 முதல் 100 சதவீத பங்குகளை விற்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது.
மேலும் இதன் பங்குகளை வாங்குவதற்கு வர்த்தக குழுக்கள் மற்றும் இராணுவ ஆதரவு நிறுவனம் உள்ளிட்ட நான்கு தரப்பினருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதன் ஏலம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இவ்வாண்டு இறுதியில், அதாவது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் நடத்தப்படலாம் என தகவல்கள் சொல்கின்றன.