நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நீண்ட தூர ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தொடர்பான துணைநிலை கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, ரெயில்களில் 70 சதவீதம் அளவுக்கு பொது பெட்டிகளும், படுக்கை வசதி பெட்டிகளும் உள்ளன. ஏ.சி. இல்லாத பிரிவுகளில் 78 சதவீத இருக்கைகள் உள்ளன. மக்களின் சவுகரியம் மற்றும் போதிய வசதிகளை உறுதி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என உறுதிபடுத்திய அவர் நடப்பு ஆண்டில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
ரெயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என அவர் கூறினார். ரெயில்வேயின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொடர் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
