இந்திய அணி கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாக விமர்சகர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே மாதம் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து அடுத்த கேப்டனாக 25 வயது சுப்மன் கில்லை BCCI தேர்வு செய்தது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் என சீனியர்களை விடுத்து கில்லை கேப்டனாக தேர்வு செய்தது, அப்போதே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில் தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 5 சதங்கள் அடிக்கப்பட்டும் கூட, ஒரு அணி தோல்வி அடைவது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை இந்திய அணி படைத்துள்ளது. கடைசியாக நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளது. அதேநேரம் தென் ஆப்ரிக்கா 8 போட்டியையும் , ஆஸ்திரேலியா 6 போட்டியிலும், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டியையும் வென்றுள்ளது.
இதேபோல நியூசிலாந்து 4 டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தான் 3 போட்டியிலும், இலங்கை 3 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் தலா 2 போட்டியையும் வென்றுள்ளன. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்று புகழப்படும் இந்தியா, 1 போட்டியை மட்டுமே வென்று அதிர்ச்சி அளித்துள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” சர்பராஸ் கான், ஷ்ரேயாஸ் அய்யர், அன்ஷூல் கம்போஜ் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கருண் நாயர், ஹர்ஷித் ராணா என ஆவரேஜ் வீரர்களுக்கு சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது. அனுபவம் மிகுந்த ரிஷப் பண்டிற்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி.
இந்த காரணங்களால் தான் இங்கிலாந்தில் இந்திய அணி செமத்தியாக அடிவாங்கி வருகிறது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் என இந்த 2 ஜோக்கர்களும் இருக்கும்வரை இந்திய அணி உருப்படாது, ” என்று சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரினை வெல்லாவிடில், கம்பீர் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.