தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் திரைப்படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி வருவதாகவும், அதற்காக தன்னிடம் மரியாதைக்கு கூட யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் கவிஞர் வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வைரமுத்து, மெளன ராகம், உயிரே, சண்டக்கோழி, மின்சாரக் கண்ணா, பூவெல்லாம் கேட்டுப் பார், விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் தங்க மகன் என தன்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலகம் சொல்லாமல் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தான் யாரையும் கடிந்து கொண்டதில்லை எனவும், காணும் இடங்களில் கேட்டதுமில்லை என தெரிவித்திருக்கும் அவர், செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில், அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வதாக குறிப்பிட்டுள்ளார். ஏன் தன்னைக் கேட்காமல் செய்தீர்கள்? என்று கேட்பது தனக்கு நாகரிகம் ஆகாது என பதிவிட்டிருக்கும் வைரமுத்து, தன்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.