சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தவர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மரியம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மரியம் ஒரு தேசிய அரசியல் கட்சி குடும்ப பின்னணியைக் கொன்டவர். கடந்த மே மாதம் நாஞ்சில் விஜயன், மரியம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார்.
அதாவது, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தனது திருமணத்திற்கு முன்பு 5 ஆண்டுகள் நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகியதாகவும் திருமணம் செய்துகொள்வதாக கூறி தனது தேவைக்கு ஏற்ப, பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் வைஶ்ரீஷா என்கிற துணை நடிகை புகாரளித்துள்ளார்.
இவர் ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ , ரிஷி உள்பட திரைப்படங்களில் நடித்துள்ளார் . திருமணத்திற்கு பின் கடந்த ஆறு மாதங்களாக நாஞ்சில் விஜயன் தனது நம்பரை ப்ளாக் செய்து வைத்திருப்பதாகவும் அவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து நாஞ்சில் விஜயனிடம் விசாரணை நடத்தியபோது நட்பு ரீதியாக மட்டுமே தான் அவருடன் பழகியதாக பதிலளித்துள்ளார்.
எனவே, அடுத்தடுத்த கட்ட விசாரணையில் திருநங்கை கூறியது போல் நாஞ்சில் விஜயன் உண்மையாக அவரை ஏமாற்றினாரா என்பது தெரியவரும்!!