Friday, June 20, 2025

‘சொந்த’ காசில் தனக்குத்தானே ‘சூனியம்’ வைத்துக் கொண்ட நெதன்யாகு

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, இஸ்ரேல் கடந்த வாரம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் யுத்தத்தில் குதிக்க, இரண்டு நாடுகளும் விடாமல் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றன.

இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவிக்க, ஈரானுக்கு ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் சப்போர்ட் செய்கின்றன. இதனால் 3வது உலகப்போர் மூண்டு விடுமோ? என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, கடந்த 16ம் தேதி நடைபெறவிருந்த பிரதமர் நெதன்யாகு மகன் அன்வர் நெதன்யாகு திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தன்னுடைய மகனின் திருமணம் குறித்த பேச்சால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து நெதன்யாகு, ” இந்த போரினால் பலரும் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்து வாடுகின்றனர். இதற்கு என்னுடைய குடும்பமும் விதிவிலக்கு அல்ல. என்னுடைய மகன் திருமணத்தை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். அது போருக்கு நாங்கள் கொடுத்த விலையாகும். இதனால் என்னுடைய குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஒரு வீராங்கனை போல என்னுடைய மனைவி இந்த துக்கத்தை தாங்கிக் கொண்டார், ” என்று போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். போரினால் ஏற்கனவே நொந்து போயிருந்த இஸ்ரேலியர்கள், நெதன்யாகுவின் இந்த பேச்சினால் தற்போது கொதித்துப்போய் இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் சமூக வலைதளங்களில், ” மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்போது, திருமணம் நின்றுபோனது பெரிய விஷயமா?

ஒரு பிரதமராக கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்,” இவ்வாறு விதவிதமாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து ஜனநாயக கட்சி உறுப்பினர் கிலாட் காரிவ், “இனி ஒருபோதும் திருமண நிகழ்ச்சியை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பல குடும்பங்களை எனக்கு தெரியும். நெதன்யாகு ஒரு இரக்கமற்ற நபர்.

இரவுப் பணிக்காக தங்கள் வீடுகளை விட்டுச் செல்லும் மருத்துவர்களும், போருக்கு நடுவே குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களும் தான் உண்மையான வீரர், வீராங்கனைகள்,” என்று விளாசித்தள்ளி  இருக்கிறார். முன்னதாக காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக தவிக்கும்போது, இந்த திருமண கொண்டாட்டம் அவசியமா? என, நெதன்யாகுவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news