போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக 5 கல்லூரி மாணவர்களை ஜெ.ஜெ.நகர் போலீஸார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கடந்த ஆண்டு டிச.4-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அலிகான் துக்ளக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கைதான அலிகான் துக்ளக்கிடமிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதான மற்ற நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, குற்றம் சாட்டப்பட்ட அலிகான் துக்ளக் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.