8-வது ஊதியக் குழுவில் அதிரடி மாற்றம் ?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக ஊதிய உயர்வு என்றாலே ‘பிட்மென்ட் பேக்டர்’ பற்றித்தான் அதிகம் விவாதிக்கப்படும். ஆனால், இந்த முறை ஊதியத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான மற்றொரு காரணியான ‘குடும்ப யூனிட்’ (Family Unit) கணக்கீட்டில் பெரிய மாற்றங்கள் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய 7-வது ஊதியக் குழுவின்படி, ஒரு அரசு ஊழியரின் குடும்பம் என்பது 3.0 என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. அதாவது ஊழியர், அவரது துணைவி மற்றும் இரு குழந்தைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், வயதான பெற்றோர்களைச் சார்ந்துள்ள ஊழியர்களின் நலனைக் கருதி, இந்த குடும்ப யூனிட்டை 4.6 அல்லது 5.0 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துள்ளது.

இந்த ஒரு சிறிய கணக்கீட்டு மாற்றம், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. உதாரணமாக, 7-வது ஊதியக் குழுவின் போது குடும்ப யூனிட் 4.6 ஆகக் கணக்கிடப்பட்டிருந்தால், அப்போது நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாய்க்குப் பதிலாக 27,600 ரூபாயாக இருந்திருக்கும். இதன் விளைவாக பிட்மென்ட் பேக்டர் 2.57-ல் இருந்து 3.94 ஆக உயர்ந்திருக்கும்.

இது நடந்திருந்தால் ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளம் இப்போது இருப்பதை விடச் சுமார் 50 சதவீதம் அதிகமாக இருந்திருக்கும். தற்போது விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ள சூழலில், இந்த குடும்ப யூனிட் மாற்றத்தை 8-வது ஊதியக் குழு பரிசீலிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த குடும்ப யூனிட் என்பது ஒரு அரசு ஊழியரின் வீட்டுச் செலவுகளை மதிப்பிடப் பயன்படும் ஒரு அடிப்படை அளவுக்கோலாகும். இந்த அளவுக்கோல் உயர்த்தப்படும்போது, அது குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை உயர்த்தும். அடிப்படை ஊதியம் உயர்ந்தால், அதனோடு தொடர்புடைய அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் இதர சலுகைகளும் தானாகவே உயரும்.

ஒட்டுமொத்த ஊதியக் கட்டமைப்பும் (Pay Matrix) இந்த அடிப்படை ஊதியத்தைச் சார்ந்தே இருப்பதால், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையில் செய்யப்படும் மாற்றம், கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் ஊதியத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பல ஆண்டுகளாகத் தங்களைச் சார்ந்துள்ள வயதான பெற்றோர்களைப் பராமரிக்கும் அரசு ஊழியர்களின் சமூகப் பொறுப்பினை ஊதியக் குழு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசியக் கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு ஏற்கனவே முன்வைத்துள்ளது.

8-வது ஊதியக் குழு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அது இந்திய அரசு ஊழியர்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஊதிய உயர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வரும் நாட்களில் ஊதியக் குழு வெளியிடப்போகும் பரிந்துரைகளில், இந்த குடும்ப யூனிட் கணக்கீடு இடம்பெறுமா என்பதைத் தான் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Related News

Latest News